‘இன்ஸ்டாகிராம்’ மூலம் காதலித்து திருமணம் செய்த ஒரு மாதத்தில் காதல் கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஊருட்டு அம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரன். இவரது மகன் பிரசாந்த் (34). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த மாதம் அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் அம்பலம் பகுதிக்குச் சென்றார். அங்கு பிரசாந்தும் அவரும் கடந்த மாதம் 5ஆம் தேதி மண்ணண்டி கோணத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் செய்த நாள் முதல் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி அந்த பெண் தனது ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். அதன்பின் அவர் மீண்டும் பிரசாந்தை பார்க்கச் செல்லவில்லை.

இதனால், தனது காதல் மனைவியை தேடி பிரசாந்த் தீபாவளியன்று பெண்ணின் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தனது மனைவி இங்கு வந்தாரா? என்று கேட்டபோது வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால், மனவேதனை அடைந்த பிரசாந்த் சென்னை செல்வதற்காக புறப்பட்டார். ஆனால், அவர் அங்கு செல்லாமல் பெருந்துறைபட்டு அந்தோணியார்புரம் செல்லும் சாலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பிரசாந்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது தந்தை சுரேந்திரன் சங்கராபுரம் வந்தார்.

பிரசாந்த் உடல்நலக்குறைவுடன் அமர்ந்திருந்த இடம் திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால், தந்தை சுரேந்திரனிடம் அங்கு சென்று புகார் அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி வாணாபுரம் காவல் நிலையத்தில் சுரேந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் வழக்குப் பதிவு செய்தார். திருமணமான ஒரு மாதத்திலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்து இருப்பதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வாணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.