தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும், அவரது காதலனும் நேற்றிரவு தூத்துக்குடியில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண், தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், அவரை மீட்ட போலீசார், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து கடற்கரை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் இருவரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது, தூத்துக்குடி திம்மையார் காலனி பகுதியைச் சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகன் வேல்முருகன் (35), லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த யோசேப் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த மகளிர் காவல்நிலைய போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.