மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங் (வயது 78). இவர், மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவர். இந்நிறுவனம் சொகுசு பிராண்டுகள் மற்றும் ஓட்டல்களில் பெரும் பங்குகளைக் கொண்ட முதலீட்டு நிறுவனம். கடந்த 2015ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44-வது இடத்தைப் பிடித்தவர் தான் இந்நிறுவனத்தின் தலைவர் கூ கே பெங் (Khoo Kay Peng).
இவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவருடைய மகள் ஏஞ்சலினா. இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவன் ஜெடிடியாவை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களை கூறி ஏஞ்சலினாவின் காதலை அவரின் தந்தை கூ கே பெங் ஏற்கவில்லை. இதனால், பரம்பரை சொத்துகள் அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு தனது காதலரை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார்.
அதன்படி, இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஏஞ்சலினா தனது பெற்றோரின் விவாகரத்தில் சாட்சிக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். தந்தை பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த போது தாய் தான் முழுவதுமாக குடும்பத்தை பார்த்துக் கொண்டதால் தனது ஆதரவாக ஏஞ்சலினா கருத்து தெரிவித்தார். மேலும், விரைவில் தாயும், தந்தையும் மீண்டும் ஒன்றாக சேர்வார்கள் எனக் கூறினார்.
ஏஞ்சலினாவின் கதையும் காதலைப் பற்றிய அவரது கருத்தும் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இது குறித்து ஏஞ்சலினா கூறுகையில், “நாம் விரும்பினால் எப்போதும் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அன்பு விலைமதிப்பற்றது. பணம் பல எதிர்மறை குணங்களுடன் வருகிறது. பிரச்சனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். அன்பு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும்” எனக் கூறியுள்ளார்.