தஞ்சை அருகே மகளை காதலித்த இளைஞரை கூலிப்படையை வைத்து கொலை செய்த தந்தை உட்பட, 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சை அருகே உள்ள திருமலை சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (23) இவர் ஒரு தனியார் பால் கம்பெனி ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவருடன் இருந்த பழக்கத்தின் காரணமாக, நில விற்பனை தொடர்பாக சக்திவேல் அடிக்கடி யோசனை கேட்பது வழக்கம். இந்த பழக்கத்தால், பாலகுருவின் மகள் தேவிகாவுடன், பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தான், கடந்த ஆறாம் தேதி சக்திவேல் வேலைக்காக வெளியே சென்று மறுபடியும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இது தொடர்பாக வல்லம் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது.
அதன் படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சென்ற எட்டாம் தேதி அம்மாபேட்டை அருகே ராராமுத்திரை கோட்டை பகுதியில், புது ஆற்றுப்பகுதியில் வெட்டு காயங்களுடன், ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கே தினமாக கிடப்பது சக்திவேல் என்பதை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக, காவல்துறையினர் அதிரடி விசாரணை மேற்கொண்டத்தில், பல அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்துள்ளது. அதாவது, பாலகுருவின் மகள் தேவிகாவை சக்திவேல் காதலித்து வந்ததும், அதற்காக ஆள் இல்லாத இடத்திற்கு பாலகுரு சக்திவேலை வரவழைத்து, கூலிப்படையை வைத்து, கொலை செய்தார் என்ற விவரமும் தெரிய வந்தது.
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், தன்னுடைய காதலன் கொலை செய்யப்பட்டது தெரிந்தும் தேவிகா எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது தான்.
பின்பு இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி, இந்த கொலைக்கு காரணமாக, இருந்த பாலகுருவின் மகன் துரைமுருகன் மற்றும் கதிர்வேல் உள்ளிட்டோருடன் சேர்த்து, பாலகுருவின் மகள் தேவிகா, கூலிப்படையை சேர்ந்த எட்டு பேர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் பிறகு, இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.