பழங்குடியின இளைஞரை காதலித்ததாக கூறி, பெற்ற மகளை தந்தையே ஆணவக் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவை அதிரவைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சித்தம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி ஓம்கார கவுடா. இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவிக்கும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர். நாகராஜ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த இளைஞருடன் இனி பழகக் கூடாது என்று தந்தை ஓம்கார கவுடா கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், மாணவி நாகராஜுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஓம்கார கவுடா மகளை கடுமையாக எச்சரித்து இருக்கிறார். அப்படியும் கேட்காமல் நாகராஜுடன் பழகி ஊர் சுற்றி வந்திருக்கிறார் அந்த சிறுமி.
இதனால் பெற்ற மகளை ஆணவக் கொலை செய்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஓம்கார கவுடா. இதையடுத்து, மகளை சினிமா, ஓட்டல், நகைக்கடை, கோவிலுக்கு அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியிருக்கிறார். எல்லாம் முடித்துக் கொண்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் அக்கிராமத்தில் கால்வாய் ஓரம் பைக்கை நிறுத்திவிட்டு மகளைத் தர வரவென்று இழுத்துச் சென்று தண்ணீரில் வைத்து அழுத்தி இருக்கிறார் தந்தை ஓம்கார கவுடா. இதில் மூச்சு திணறி அப்பா… அப்பா.. என்று அந்த சிறுமி கதறி இருக்கிறார். ஆனால், ஆவேசமாக சிறுமியை தண்ணீரில் வைத்து அழுத்தியதில் மூச்சு திணறி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
மகளைக் கொன்று விட்டு திருப்பதிக்கு தப்பிச் சென்றிருக்கிறார் ஓங்கார கவுடா. சந்தேகம் வரக்கூடாது வரக்கூடாது என்பதற்காக தனது மகளை காணவில்லை என்று ஓம்கார கௌடாவின் மனைவி போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், விசாரணையில் பல சந்தேகங்கள் இருந்ததால் துருவி துருவி விசாரணை நடத்தியதில் வேறு சாதி இளைஞரை காதலித்ததால் ஆணவக் கொலை செய்திருப்பது அம்பலமானது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள ஓம்கார கவுடாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.