எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். முருகப் பெருமாளுக்கு சொந்தமான ஆர்.ஆர்.இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சன் என்ற கட்டுமான நிறுவனம், மதுரை, நத்தம், துவரங்குறிச்சி பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. தவிர, மதுரையில் அண்ணாநகர், அவனியாபுரம், சிலைமான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெவ்வேறு நிறுவனங்கள் பெயர்களில் தனி வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த குடியிருப்பு வீடுகள் பராமரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த குடியிருப்பு வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்கள் வாங்கியது, வீடுகள் விற்பனையில் பல்வேறு வரி ஏய்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் அரசு கான்ட்ராக்ட் எடுத்த விவகாரத்திலும், பெரிய அளவில் முறைகேடுகள் நடத்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையை நடத்தினர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. இந்த சோதனையில் பல நூறு கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் கான்ட்ராக்ட் எடுத்து வரி ஏய்ப்பு செய்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசு ஒப்பந்தப்பணிகள் எடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மற்றும் அதிகளவிற்கான சொத்துகள் மற்றும் ரொக்க பணப்பரிமாற்றம் நடந்துள்ளது குறித்தும் ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தெரிகிறது.
ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் கான்ட்ராக்டருமான செய்யாதுரை வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்தது. தற்போது முருகப்பெருமாள் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் ஆர்.ஆர். இன்பிரா கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.. இதே போல் திண்டுக்கல்லிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.. இந்த சோதனையும் நாளையும் தொடரும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..