பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 27 வயதான சந்தோஷ். தனியார் நிறுவன ஊழியரான இவர், அதே நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த சமயத்தில், அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு பெண்ணுடன் சந்தோசுக்கு காதல் மலர்ந்துள்ளது.
இதனை அறிந்த சந்தோசின் முதல் காதலி, அவரை நிறுவனத்தில் வைத்து கடுமையாக திட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சந்தோசின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, சந்தோசின் பெற்றோர் அவரின் முதல் காதலியின் பெற்றோரை அழைத்து பேசியுள்ளனர். இந்நிலையில், சந்தோசுக்கும் அவரது முதல் காதலிக்கும், திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சமையத்தில், சந்தோசின் முதல் காதலி வேறு கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்க்கு சந்தோஷ் தான் காரணம் என நினைத்த முதல் காதலி சந்தோசிடம் தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில் முதல் காதலியுடன் திருமணம் குறித்து அறிந்த 2-வது காதலி, சந்தோசுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, இருவரும் தன்னை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தனது மகன் சாவுக்கு 2 காதலிகள் தான் காரணம் என அவரது பெற்றோர் ராமமூர்த்திநகர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.