கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான மோனிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 24 வயதான ஜெயபிரகாஷ் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். ஜெயபிரகாஷ் கட்டிட மேஸ்திரி. நாளடைவில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர். மேலும், உன்னை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் மோனிகாவிற்கு, ஜெயபிரகாஷ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்துள்ளது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜெயபிரகாஷ், மோனிகாவை பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இருவரும் ஒன்றாக இருக்கும் போது மோனிகாவிற்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். மேலும் அவர் கோவையில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும் மோனிகாவை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்ற எண்ணத்தில் மோனிகாவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஜெயபிரகாஷிடம் மோனிகா தன்னை திருமணம் செய்யும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினால், 2 பேரும் ஜாலியாக இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் அவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், பணம் தர வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்த போன மோனிகா, ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க முதல் கட்டமாக ரூ.70 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். பின்னர், மீண்டும் தான் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை கொடுத்துள்ளார். ஆனால், பணம் மற்றும் நகையை பெற்றுக்கொண்ட பின்னரும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மோனிகா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் ஜெயபிரகாஷ் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். சிக்காமல் தலை மறைவான அவரை போலீசார் தற்போது கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.