திருமண மோசடி புகாரில் தமக்கு நியாயம் கிடைக்காமல் போனால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி பேசியதாக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “நாம் தமிழர் கட்சிக்கு நீங்க பெரிய தலைவராக் இருக்கலாம். ஆனால் எனக்கு நீங்க எதுவுமே இல்லை. கணவன்-மனைவியாக நாம் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்களை திருத்தக் கூடிய உரிமை எனக்கு உண்டு. கடந்த மார்ச் மாதம் நீங்கள் சொன்னபடியே புகார் கொடுக்காமல் திரும்பிப் போனேன்.
ஆனால், இன்றைக்கு யாரால் புகார் கொடுக்க வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாதா? மாதம் ரூ.50,000 பணம், புகார் கொடுக்காமல் அமைதியாக பெங்களூருக்கு போக வேண்டும், லோக்சபா தேர்தல் முடியும் வரை தமிழ்நாட்டிற்கு வரக் கூடாது என நிபந்தனை விதித்தது நீங்கதானே. சீமான் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் கட்சிக்காரர்களை வைத்து என்னை கொச்சைப்படுத்திக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்காதீர்கள்.
நான் ஏதாவது சாகும் வரை உண்ணாவிரதம்னு போராட்டத்தில் இறங்குனா… நான் எப்படி அடம் பிடிப்பேன்னு உங்களுக்கு நல்லா தெரியும் சீமான். தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். ஏற்கனவே உங்க மேல பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகள் கூட போட்டுருக்காங்க. அதனால், நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள். உங்கள் தம்பிகளின் பேச்சை கேட்டால், அவர்கள் உங்கள் தலைமேல் மண்ணைத்தான் அள்ளிப் போடுவார்கள். ஒரு பெண்ணை ஒரு அளவுக்குதான் சித்திரவதை செய்யணும். ஆனால், நீங்கள் மிகவும் அதிகமாக சித்திரவதை செய்துவிட்டீர்கள்“ என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.