உலகில் பல விநோத நிகழ்வுகளெல்லாம் நடந்து வரும் நிலையில், இதற்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறது சீனா. நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்கள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், தற்போதும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, சீனாவில் இப்போது டிரெண்டாகி வருகிறது ஒருநாள் திருமணம். என்னது ஒரு நாள் திருமணமா? இது சாத்தியமா? என்று தானே கேட்கிறீர்கள். அதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சீனா ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் இந்த ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இறந்த பிறகு தங்கள் மூதாதையருடன் சென்று சேர வேண்டும் என்பதற்காக இப்படி திருமணம் செய்து கொள்கிறார்களாம். அங்குள்ள வழக்கத்தின் படி, திருமணம் செய்து கொண்டு மனைவி, மக்கள் என குடும்பதை சுமக்க முடியாமல், ஏழ்மை நிலையில் இருக்கும் ஆண்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களைப் புதைக்க முடியாது.
இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்கத்திற்கு போய் சேர முடியாது என்பது அந்த கிராம மக்களின் நம்பிக்கை. இதனால் ஏற்படும் பாவம் பல தலைமுறைகளுக்குத் தொடரும் என்றும் நம்புகின்றனர். சொர்க்கத்தில் மூதாதையருடன் இணைய வேண்டுமென்றால், ஆண்கள் அனைவரும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் புதைக்கப்படும் போது சொர்க்கத்தில் தேவை என அவர்களுக்குப் பணத்தையும் தேவையான பொருட்களையும் கூட சேர்த்தே புதைக்கிறார்கள். இந்த நம்பிக்கையின் காரணமாகத் தான் அங்கு இதுபோல நடக்கும் ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம், உயிருடன் இருக்கும் நபர்கள் இறந்தவரை கூட இந்த சம்பிரதாயத்திற்காகத் திருமணம் செய்து கொள்வார்களாம். அதற்குப் பதிலாக இப்போது இவர்கள் இப்படி ஒரு நாள் திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கெல்லாம் தனியாக கம்பெனி எல்லாம் இருக்கிறதாம். இந்த ஒரு நாள் திருமணங்களை ஏற்பாடு செய்யும் தரகர் கூறுகையில், இந்த ஒரு நாள் திருமணத்திற்காக பல தொழில்முறை மணமகள்கள் உள்ளனர். அவர்களுக்கான கட்டணம் 3,600 யுவான். அதாவது ரூ.41,400 ஆகும். அதுபோக தரகர் கமிஷன் 1,000 யுவான் ஆகும்.
இந்த கிராம மக்களின் வழக்கத்தின்படி, இருவருக்கும் திருமணம் நடக்கும். பின்னர், தனக்கு திருமணம் நடந்ததை மூதாதையர்களுக்குக் தெரிவிக்கும் விதமாக அவர்கள் குடும்ப கல்லறைக்குச் செல்வார்கள். உள்ளூர் பெண்கள் ஒரு நாள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குகிறார்கள். இதனால், வெளியூரில் இருந்து பெண்கள் வரவழைக்கப்பட்டு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களே பணத்திற்காக இந்த சடங்கிற்கு சம்மதம் தெரிவிக்கிறார்களாம்.
திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இதுபோன்ற ஒரு நாள் திருமணங்களைச் செய்து வருகிறார்கள். இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானது கிடையாது. அனைத்தும் சடங்கிற்காக மட்டுமே செய்யப்படுகிறது. திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ தான்.