மும்பையில் தானே மாவட்டத்தில் உள்ளது உல்லாஸ் நகர். இப்பகுதியில் பிரிஜேஷ் என்கிற 30 வயது வாலிபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் அவரின் தங்கையும் வசித்து வந்துள்ளார். தாய் ,தந்தையை இழந்து விட்டதால் அண்ணன் குடும்பத்துடன் அந்த 12 வயது சிறுமி வசித்து வந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தங்கையின் ஆடையில் ரத்த கறையை பார்த்திருக்கிறார். எப்படி வந்தது என்று விசாரித்து இருக்கிறார். அந்த சிறுமிக்கு அப்பொழுதுதான் முதல் முதலாக மாதவிடாய் ஆரம்பித்திருக்கிறது. அது மாதவிடாய் என்பது அச்சிறுமிக்கு தெரியாததால் அண்ணனிடம் என்னவென்று சொல்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார். இதை அண்ணன் தவறாக புரிந்து கொண்டு, தனது தங்கை யாருடனோ பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார். அதனால் தான் இப்படி ரத்தக்கரை வந்திருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொண்டு தங்கையை கொடுமைப்படுத்தி இருக்கிறார்.
4 நாட்களாக அடித்து உதைத்து இருக்கிறார். சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து அடித்து உதைத்துள்ளார். ஈவு இரக்கமே இல்லாமல் தங்கையின் உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார். இதில் சிறுமி போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்திதார். போலீசார் நடத்திய விசாரணையில், பிரிஜேஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் சிறுமிக்கு மாதவிடாய் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால் அது பற்றி அண்ணனிடம் சொல்ல முடியவில்லை . இதனால் தங்கை வேறு ஒருவருடன் பாலியல் உறவில் இருக்கிறார் என்பதை தவறாக புரிந்து கொண்டு அடித்து உதைத்து உடல் முழுவதும் சூடு வைத்ததில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருக்கிறார் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.