கொரோனாவிற்குப் பின்பு வேகமாக பரவிவரும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை தடுக்க தூதுவளை மற்றும் கற்பூரவள்ளி இலைகள் பெரிதும் பயன்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் அதிலிருந்து இதுவரை மீண்டுவந்தபாடியில்லை. இந்தநிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. இந்தநிலையில், இன்ஃப்ளூயன்சா ரக காய்ச்சல் தற்போது பரவிவருகிறது. காய்ச்சல், இருமல், உடல் வலி, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்றவை மூச்சு விடுவதில் சிரமம், பல நாட்களுக்கு நீடிக்கும் இருமல் ஆகியவை இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின்ன் முக்கிய அறிகுறியாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தூதுவளை மற்றும் கற்பூரவள்ளி இலைகள் பெரிதும் பயன்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதாவது லேசான அறிகுறிகள் இருப்பின் வாரத்தில் இரண்டு நாட்களாவது தூதுவளைக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ செய்து சாப்பிடலாம். வெப்பம் அதிகரித்திருக்கும் இப்போதைய காலத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் போதுமானது. தூதுவளைக்கு கோழையை அகற்றக் கூடிய தன்மை இருக்கிறது. இதன் இலைகளை உலர வைத்து பொடி செய்து கொண்டு, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய், தக்காளி சட்னிகளுக்கு இடையில் அவ்வப்போது தூதுவளை இலைகளையும் சட்னியாக செய்து சாப்பிடலாம். இலைகளை நீரில் கொதிக்க வைத்து சிறிது மிளகு, உப்பு சேர்த்து, “சூப்” செய்தும் பருகலாம்.
இருமல் இருப்பின் சிறிதளவு கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடலாம். இதன் ‘வாலடைல்’ எண்ணெயில் உள்ள ’p-cymene’ மற்றும் ’thymol’ அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாகின்றன. இப்போதைய சூழலில் வேது பிடிப்பதும் பயன் கொடுக்கும். வேது பிடிக்க பயன்படும் மூலிகைகளில் கற்பூரவள்ளி முக்கியமானது. கற்பூரவள்ளியை இடித்து சாறு பிழிந்து, சம அளவு தேன் சேர்த்துப் பருகலாம். கற்பூரவள்ளி சாறை சுண்டச் செய்து பருகும் சுரச ரக மருந்தும் அற்புதப் பலன் அளிக்கும்.