தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 21, 22ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 21ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், வரும் 22ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.