”பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தியுள்ளார்” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தி உள்ளார். திமுக அமைச்சர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. ஜமீன்தாரர், குறுநில மன்னர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். உண்மையான எஜமானர்கள் மக்கள் தான். திமுக அமைச்சர்களின் நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் வருகிறார்கள். தேர்தலில் இதற்கான தாக்கம் நிச்சயம் இருக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்தாலே வன்முறை தலைதூக்குகிறது. சாதிக்கலவரம், மதக்கலவரம், தீவிரவாதம் உள்ளிட்டவற்றை செய்பவர்களுக்கு அரசை பார்த்து எவ்வித பயமும் இல்லை. சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு திராணி இல்லை. அதிமுக தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கண்டித்து திமுகவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். கட்சி பணிகள் தொடர்ந்து தொய்வு இல்லாமல் நடைபெற்று கொண்டிருக்கின்றது”. இவ்வாறு அவர் பேசினார்.