அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கேட்பதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, உடனடியாக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக நாளையே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி கவுல், ‘ஏன் இவ்வளவு அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் தான் உடனடியாக அணுகியுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு, அக்டோபர் 30ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்திருந்தார்.
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி, மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வந்தது. இது உடல்நலத்தை காரணமாக கொண்டு கேட்கப்பட்டுள்ள ஜாமீன் மனு ஆகும். ஆனால், வழக்கில் இன்று ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர்கள் வரவில்லை. எனவே, இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வரக்கறிஞர் ராம்சங்கர் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.