பீகாரில் வரதட்சணையாக குளிர்சாதனப் பெட்டி (ஃப்ரிஜ்) வாங்கிக் கொடுக்காத மருமகளை, மாமியார் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார மாநிலம், பூர்ணியா பகுதியைச் சேர்ந்தவர் மோமினத் ஆலம். இவரது மனைவி அங்கூரி பேகம்(30). இந்த தம்பதியருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், அங்கூரி பேகம் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் பவானிபூரில் உள்ள அவரது மாமியார் வீட்டில் அங்கூரி பேகம் இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்சியடைந்த அவரது உறவினர்கள், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார், அங்கூரி பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூர்ணியா சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதே பரிசோதனையில் அங்கூரி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. பின்னர், அங்கூரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அங்கூரி பேகத்தின் சகோதரர் கவுசர் ராஜா கூறுகையில், “எனது சகோதரி வரதட்சணையாக குளிர்சாதனப் பெட்டி வாங்கித் தரவில்லை என மாமியார் வீட்டில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் உடல் ரீதியாக ஏற்கெனவே துன்புறுத்தப்பட்டார். தற்போது குளிர்சாதனப் பெட்டிக்காக எனது சகோதரி கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, அங்கூரியின் மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பீகாரில் ஏற்கனவே வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில், மின்சாரம் தாக்கி இறந்ததாக 36 வயது பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.