இறந்த தாயின் உடலை கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, 4 நாட்களாக சடலத்துடன் இருந்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் நிகில் (45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நிகிலின் இரு பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். நிகில் மட்டுமே நோயுற்ற தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சாந்தி தேவியின் வீட்டிலிருந்து நேற்று (டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், வீட்டிற்குள் நுழைந்து அங்கு கட்டிலின் அடியில் இருந்த சாந்திதேவியின் சடலத்தை மீட்டனர். அப்போது, தனது தாயார் 4 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக நிகில் போலீசாரிடம் கூறியுள்ளார்.
![கட்டிலுக்கு அடியில் தாயின் உடல்..!! துர்நாற்றம் வீசும்போதெல்லாம் ஊதுவத்தி கொளுத்திய மகன்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/Death.jpeg)
இதையடுத்து நிகிலை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நிகில் இறந்த தாயின் உடலை கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, 4 நாட்களாக வீட்டிலேயே இருந்ததாகவும், துர்நாற்றம் வீசும்போது ஊதுவத்தி கொளுத்தி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். நிகில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி தாயாரை தாக்கி வந்தார் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறினர். நிகிலின் செயல்களால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், அந்த கட்டிடத்தில் குடியிருந்த வாடகைதாரர்களும் காலி செய்துவிட்டதாகவும் தெரிகிறது. சாந்தி தேவி உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறப்பட்டாலும், நிகில் அவரது உடலை வீட்டில் மறைத்து வைத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.