காதலியைப் பற்றி நண்பன் தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டதில் கல்லால் தலையில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத உடல் கிடைத்துள்ளது. 22 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட உடலில் சூர்யா, பேட்பாய், பிரதீப் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதை வைத்து போலீசார் கண்டுபிடித்ததில் படூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த் (22) என்பது தெரியவந்தது.
உடலில் பச்சை குத்தப்பட்டு இருந்த பிரதீப் என்பவரை அழைத்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் முன்னுக்கு பின் முரணான தகவல் கிடைத்தது. இதையடுத்து கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சி.சி.டி.வி. காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தியபோது அதில் பிரதீப் லட்சுமிகாந்த்துடன் பைக்கில் சென்றது தெரியவந்தது.
எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சில நாட்களுக்கு முன்பு பிரதீப் , லட்சுமி காந்த் , சதீஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிரதீப்பின் காதலி பற்றி லட்சுமிகாந்த் போதையில் தவறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்து பிரதீப் லட்சுமிகாந்தை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளான். தப்பித்து ஓட முயன்ற லட்சுமிகாந்தை சதீஷ் கண்ணன் தடுத்து நிறுத்தியுள்ளான். இருவரும் சேர்ந்து லட்சுமி காந்தை கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது.