Myanmar earthquake: மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை வெளியேற்ற மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021 பிப்ரவரியில், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2,376 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மியான்மரில் ஆளும் ராணுவம் தெரிவித்துஉள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நய்பிடா விமான நிலையத்தில் தகவல் தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்ததால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், யாங்கூன் நகருக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டட இடிபாடுகளால், மியான்மர் முழுதும் கான்கிரீட் குவியலாக காட்சியளிக்கிறது. இடிபாடுகளை தோண்டத் தோண்ட உடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம், அதன் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 47 பேரை காணவில்லை என்றும் பாங்காக் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உயிர்சேதத்தை விட, பொருட்சேதம் தான் அதிகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளன. இந்த நாடுகளின் சார்பில் மியான்மருக்கு மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மியான்மரில் இந்தியா தனது மீட்பு நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்று பெயரிட்டுள்ளது. இந்தியா ஒரு இராணுவ போக்குவரத்து விமானம் மூலம் யாங்கோனுக்கு 15 டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீட்புப் பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற மற்றொரு இராணுவ விமானம் மியான்மரின் தலைநகர் நய்பிடாவில் தரையிறங்கியது.
Readmore: அடுத்தடுத்து தோல்விகளால் திணறும் மும்பை!. 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி!