கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில், வாக்காளர் பட்டியலில், 830 வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போனதாக, பா.ஜ.க, நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கப்பா பள்ளியில் உள்ள சாவடி எண் 214-ல் வாக்குரிமையைப் பயன்படுத்த வந்த ஏராளமான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாததால் ஏமாற்றம் அடைந்தனர். உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 1,353 வாக்காளர்களில் 523 வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடம் பெற்றுள்ளன.
வாக்காளர்கள் காணாமல் போனது குறித்த தகவல் பரவியதையடுத்து, அப்பகுதி பாஜக நிர்வாகிகள் அங்கு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அக்கட்சியின் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் வாக்கு சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.