நாங்குநேரியில் நிகழ்ந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த அம்பிகா என்பவரது மகன் சின்னதுரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9ஆம் தேதி அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர் கிருஷ்ணன், த/பெ.சுடலைமுத்து (வயது 59) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.
உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.