அரியானாவில் வீரர்களுக்கு போதை ஊசிகளை சப்ளை செய்ய இருந்த கபடி வீரர் ஒருவரை அம்மாநில போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் ஹன்சி மாவட்டத்தில் போதைப் பொருள் ஊசிகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையே போதைப் பொருள் தடுப்பு போலீசாருக்கு HR 12AF 6262 என்ற எண்ணைக் கொண்ட காரில் போதை ஊசிகள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த காரை ஹன்சி மாவட்டத்தின் ஜக்கா படா பாலம் அருகே, வாகனச் சோதனையின்போது போலீசார் மடக்கியுள்ளனர். அப்போது அஜய் என்பவரிடம் இருந்து 500 ஸ்டீராய்டு போதை ஊசிகள் கைப்பற்றப்பட்டன. வியாழன் அன்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் அஜய் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளியன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அமிர்தசரஸில் நடக்கும் கபடி போட்டியின்போது இந்த ஊசிகள் சப்ளை செய்யப்பட இருந்ததாக அஜய் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். இதற்கிடையில், வீரருக்கு எங்கிருந்து போதை ஊசி கிடைத்தது, யாருக்கு சப்ளை செய்ய போகிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட சுமார் 200 போதைப் பொருள் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.