முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.
சரஸ்வதி படிப்பிற்கு உரிய தெய்வம் மட்டுமல்ல. அவள் ஞானத்தை வழங்கக் கூடியவள். வாக்கு, பேச்சிற்குரிய தெய்வமாகவும் வழிபடப்படுபவள். அதனால் தான் சரஸ்வதி தேவிக்கு வாக்தேவி, ஞானவாணி என்ற பெயர்களும் உண்டு. நம்முடைய பேச்சு நல்லதாகவும், நன்மை தருவதாகவும் அமைவதற்கு கலைவாணியின் அருள் வாழ்நாள் முழுவதும் அனைவரும் வேண்டும். நவராத்திரியின் 7ம் நாளில் சரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பெயர் – சாம்பவி, கோலம் – மலர்களால் சங்கு வடிவ கோலம், மலர் – தாழம்பூ, இலை – தும்பை இலை, நைவேத்தியம் – எலுமிச்சை சாதம், சுண்டல் – கொண்டைக்கடலை சுண்டல், பழம் – பேரீச்சம் பழம், ராகம் – பிலஹரி, நிறம் – இளம் சிவப்பு ஆகியவை கொண்டு வழிபட வேண்டும். நவராத்திரியின் 7 ம் நாளில் அம்பிகையை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். தீய குணங்கள் நீங்கும், துர்சக்திகள் நெருங்காது, மனம் வலிமை அடையும், தைரியம் உண்டாகும், அறியாமை நம்மை விட்டு நீங்கும்.
நவராத்திரி 7 ம் நாளான மகாசப்தமி வழிபாட்டினை, சப்தமி திதியிலேயே செய்ய வேண்டும். அக்டோபர் 20 ம் தேதி இரவு 09.33 மணிக்கே சப்தமி திதி துவங்கி விடுகிறது. அக்டோபர் 21 ம் தேதி இரவு 07.41 வரை சப்தமி திதி உள்ளது. இதனால் செப்டம்பர் 21 ம் தேதி காலை முதலே 7ம் நாள் வழிபாட்டை செய்யலாம். அன்று சனிக்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 வரை ராகு காலமும், பகல் 01.30 முதல் 3 மணி வரை எமகண்டமும் உள்ளது. அதனால் இந்த நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பூஜை செய்யலாம். மாலையில் பூஜை செய்பவர்கள் இரவு 07.30 மணிக்கு முன்பாக வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
நவதுர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 7ம் நாளுக்குரிய தேவியாக கலாத்ரி தேவி வழிபடப்படுகிறாள். துர்க்கையின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் இந்த தேவி தான் பராசக்தியின் உக்கிர வடிவங்களில் முதல் தேவியாக உள்ளாள். தேவி மகாத்மியத்தில் முதல் தேவியாக போற்றப்படுபவளும் இவளே. காளியின் உருவில் கழுதை வாகனத்தில், பலவிதமான ஆயுதங்களுடன் தலைமுடியை விரித்த கோலத்தில் காட்சி தருகிறாள். இவள் தனது பக்தர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றக் கூடிய தேவியாக விளங்குகிறாள். ஓம் தேவி காலாத்ரியாய நமஹ, க்லீம் ஐம் ஸ்ரீ காளிகாயே நமஹ, ஓம் நமோ பகவதி காளி சாமுண்டி தேவி, பைரவிதேவி ஓங்கார நீலி சத்தி மம வசமாயிக்க சுவாஹா, ஓம் காளி ஓம் பிடாரி ஓம் நமசிவாய ஸ்வாஹா மந்திரங்களை கூறி வழிபடலாம்.