அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறிய நகர்ப்புற வீடுகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களை வழங்க ரூ.60000 கோடியை செலவிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு அடுத்தடுத்து பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஓரிரு மாதங்களில் இந்தத் திட்டம் வங்கிகளால் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறவும், நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த மாதம் மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையை 18 சதவீதம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களுக்கான வீட்டுக் கடனில் வட்டி தொகையில் மானியம் அளிக்கும் திட்டத்தை இந்த மாதம் (செப்டம்பர்) மத்திய அரசு தொடங்கும் என்று வீட்டுவசதி அமைச்சர் ஹர்தீப் சிங் ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்திலும் பிரதமர் மோடி இதுக்குறித்து பேசினார். இந்த நகரப்புற சிறப்பு கடன் சலுகை முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சலுகை திட்டம் மூலம் எவ்வளவு பலன் ஒருவருக்கு கிடைக்கும். 50 லட்சம் ரூபாய்க்கு குறைவான கடன் 20 வருட காலத்திற்கு வீட்டு கடன் பெறுவோருக்கு சுமார் 9 லட்சம் ரூபாய் தொகைக்கு 3 முதல் 6.5 சதவீதம் என்ற வட்டி சலுகை அளிக்கப்படும். மத்திய அரசின் இந்த 60000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மூலம் சுமார் 25 லட்சம் பேர் பலன் பெறுவார்கள் என கணிக்கப்படுகிறது.