நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக இருந்த கேரளாவைச் சேர்ந்த ரஷித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய கோரிக்கை, நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்து கொண்டிருக்கும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொரு தேர்வு எழுதும் அறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்வு மையத்தில் தேர்வரின் புகைப்படமும் அனுமதி சீட்டில் உள்ள புகைப்படமும் சரியாக இருக்கிறதா என அரை கண்காணிப்பாளர் சரிபார்க்க வேண்டும். கண்விழித்திரை பதிவு, விண்ணப்பிக்கும் போது எடுக்கும் கைரேகைப் பதிவு, தேர்வு மையத்தில் கைரேகைப் பதிவு மற்றும் கவுன்சிலிங்கின் போது கைரேகைப் பதிவு என்று மூன்று இடங்களில் கைரேகைப் பதிவு செய்வதை முறைப்படுத்த வேண்டும்.
பேஸ் டிடெக்டர் (Face Detector) போன்ற நவீன கருவிகளை மற்றும் மென்பொருளை பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கலாம். தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதின் மூலம் சோதனை முறைகளை எளிதாக்கி கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பதில் மனுவில் கூறியுள்ளனர். இதையெல்லாம் கேட்டுக் கொண்ட நீதிபதி நிர்மல் குமார், ரஷித்தின் ஜாமீன் வழக்கை தீர்ப்புக்காக தள்ளி வைத்தார்.