புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் அறிவு நிதி, யூடியூப் வீடியோவை பார்த்தே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவரின் பெற்றோர் கூலித் தொழிலாளிகள் தான். புத்தகம் கூட வாங்கி படிக்கக் கூட முடியாத நிலையில், இருந்த இந்த மாணவன், கடும் முயற்சியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். பயிற்சி மையத்தில் சேரும் அளவுக்கு இவரிடம் காசு இல்லை. யூடியூப் வீடியோக்களை பார்த்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இப்போது நீட் தேர்வில் 348 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் இவருக்குத் தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் கிடைத்துள்ளது.
இதுபற்றி அந்த மாணவன் கூறுகையில், ”நான் பயாலஜி மட்டுமே படித்து வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், இயற்பியல் மற்றும் வேதியில் பாடங்களிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினார். நான் இதுவரை கோச்சிங் சென்டருக்கு போனதில்லை. ஏனென்றால், அதை விட யூடியூபில் சிறப்பாக நடத்துகிறார்கள். நான் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். பள்ளியில் நன்றாக சொல்லி கொடுத்தார்கள். இதன் மூலம் என்னால் முதல் முறையிலேயே நீட் தேர்வை க்ளியர் செய்ய முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நீட் தேர்வு கட்டாயம் தேவை.
நீட் இருந்தால் மட்டுமே என்னைப் போன்ற ஏழை மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியும். இல்லையென்றால் யாராலும் உள்ளே போக முடியாது. இதன் மூலம் 497 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வுக்கு வருவதற்கு முன்பு கிராமப்புற அரசுப் பள்ளிகளில் இருந்து யாரும் சென்றதாகத் தெரியவில்லை. நீட் இருந்தால் தான் அரசுப் பள்ளி மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியும். நீட் தேர்வைப் புரிந்து படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
தமிழ் வழி மாணவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இத்தனை காலம் தமிழில் படித்தோம். இப்போது ஆங்கிலத்தில் இருக்கிறதே என கவலையடைய வேண்டாம். க்ளியர் செய்த நான் சொல்கிறேன். ஆங்கிலத்தில் படித்து எழுதுவது ஈஸிதான். எனவே அரசுப் பள்ளி மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ளாமல் நீட் தேர்வுக்கு தயாராகுங்கள். நிச்சயம் க்ளியர் செய்யலாம்” என்றார்.