தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானம் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, “தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் எந்த பார்களும் இயங்கவில்லை. அவ்வாறு இயங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மது பாட்டில்களால் விவசாயிகளுக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் டெட்ரோ பேக் மூலம் மதுவிற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரூ.5, ரூ.10 கூடுதலாக வாங்குவது 99% தடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் போது அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு எந்திரம் வழங்கப்பட்டு, மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால், பில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனை நிறைவேற்றும் வகையில், டாஸ்மாக் கடைகளில் ‘பில்’ வழங்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பதை மதுப்பிரியர்கள் வரவேற்றுள்ளனர்.