சென்னையில் நடந்த ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ”மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக பொய் சொல்லி கொண்டிருக்கிறது. திமுக வடக்கு-தெற்கு பிரச்சனையை கிளப்பி வருகிறது. மத்திய அரசு இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறது. இதில் தமிழ்நாட்டில் இரண்டரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது.
DMK என்பதற்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? D என்பது Dynasty. அதாவது வாரிசு அரசியல். M என்பது Money. பணத்தை கொள்ளையடிப்பது. K என்பது கட்ட பஞ்சாயத்து. தாத்தா, அப்பா, பேரன் என்ற வரிசையில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி உள்ளனர். தமிழகத்தில் ஒரு அமைச்சர் 200 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். ஆனாலும், இன்னும் அவர் அமைச்சராக தொடர்கிறார். திமுக சொன்னதை எதையும் செய்யவில்லை. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவில்லை. லஞ்சம் எப்படி வாங்குவது என்பது பற்றி தான் அவர்களின் சிந்தனை உள்ளது.
அதேபோல் தான் ‘இந்தியா’ கூட்டணி. ஊழல் செய்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை ஆரம்பித்துள்ளன. தங்களின் குடும்பத்தை காப்பாற்றவும், லஞ்சம் வாங்கவும், வாங்கிய சொத்துகளை காப்பாற்றவும் தான் இந்த கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளிலும் வாரிசுகள் தான் வளர்கின்றனர்” என்றார்.