தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அருகில் நகரும் என்பதால் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.