மகளிர் உரிமைத்தொகை ஏற்கனவே 2 முறை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்.15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு, இரண்டு மாதங்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. மேலும் தங்களுக்குத் தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று கருதும் பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியானது. அதாவது, உரிமை தொகை குறித்து அவ்வப்போது மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், மாதந்தோறும் சிறப்புக் கூட்டங்களை நடத்தி அதில் பணவசதி கொண்டவர்கள் யாராவது உரிமை தொகை பெறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் பெயர் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) வரும் அக். 26ஆம் தேதி முதல் உரிமைத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் காலவரையின்றி புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் தலைவர் எம்.பி. முருகையன் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், “விரிவான ஆலோசனைக்கு பிறகே இந்த திட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்காகச் சிறப்பு அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டுள்ள ஏஐஎஸ் அதிகாரி இளம்பகவத்தின் செயல்பாடுகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவரது போக்கும் நடத்தையும் ஊழியர்களுக்கு விரோதமாக இருக்கிறது. இதுவே உரிமைத்தொகை பணிகளைப் புறக்கணிக்க முக்கியக் காரணமாகும்” என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். இத்திட்டத்தில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அது குறித்துப் பேசப் போனால் சிறப்பு அதிகாரி அதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஊழியர்கள் சொல்லும் பிரச்சனையைக் கேட்காமல் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை மட்டும் அளிக்கிறார். அதுவே பிரச்சனைக்குப் பிரதான காரணம் என்று முருகையன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாலுகா அளவில் சில இடங்களில் ஆள்பற்றாக்குறை இருக்கிறது. இது அரசுக்கும் நன்கு தெரியும். எனவே, இத்திட்டத்திற்குக் கூடுதல் அதிகாரிகள் நிச்சயம் தேவைப்படும். அப்படியிருக்கும் போது வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள் மகளிர் உரிமை திட்டப் பணிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அக்டோபர் 26ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு அனைத்து அதிகாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் முருகையன் கூறினார். அதன் பிறகும் பிரச்சனை சரி செய்யவில்லை என்றால், நவம்பர் 21ஆம் தேதி ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்தும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். உரிமை தொகை தொடர்பான அனைத்து பணிகளையும் புறக்கணித்தால், அது உரிமை தொகை மேல்முறையீடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கலை தரும் என்றே கூறப்படுகிறது.