மது அருந்திவிட்டு வாகன ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை எனில், அவர்களின் வாகனம் மட்டுமல்லாமல், அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..
சாலைவிபத்துகளை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களிடம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. அதன்படி கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து போலீசார், எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக, மது போதையில் வாகன ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. மது போதையில் வாகனம் ஓட்டும் நபர்களுடன் பயணிக்கும் நபர்களும் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையும் அமலில் உள்ளது..
இந்த சூழலில் விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் வகையில் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.. அதன்படி, இனி அபராத தொகை செலுத்தவில்லை என்றால் சம்மந்தப்பட்ட வாகனங்கள் அல்லது இதர வாகனங்கள் அல்லது அசையும் சொத்துக்கள் நீதிமன்றங்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்..