இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது. 13 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வை நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் இந்த கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதியன்று வெளியானது. இதில் 11,45,976 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 78,691 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து சேர்க்கைக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 10 ம்தேதி வரை இருந்த நிலையில் தற்போது ஜூலை 12ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnhealth.tn.gov.in, www.medicalselection.net என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் முடிந்த பின்னர் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.