கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவருடனும் தொடர்பில் இருந்த 1,080 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 6 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நிபா வைரஸ் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜிவ் பால், ”கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான விகிதம் 2 விழுக்காடாக இருக்கும் நிலையில், நிஃபாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைய 40 முதல் 70 விழுக்காடு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்தான Monoclonal Antibody மருந்து 20 டோஸ்களை மத்திய அரசு வாங்க உள்ளது” என்று ராஜிவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், நிஃபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக, புதுச்சேரி அரசின் கீழ் உள்ள மாகேயில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
எச்சரிக்கை :
கடற்கரை, பூங்கா, வணிக வளாகம் போன்ற இடங்களுக்குச் செல்வதை அதிகபட்சம் தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சானிடைசர் கொண்டு கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.