இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீபாவளி விருந்தில் நித்யானந்தாவை சிறப்பு அழைப்பாளராக, அந்நாட்டு எம்பிக்கள் அழைத்ததாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் நித்யானந்தா தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திய நித்யானந்தா, அங்கிருந்து மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிவந்தார். இந்நிலையில், நித்யானந்தா மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் சிறை சென்ற நித்யானந்தா, கடந்த 2019இல் இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவானார். நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்து கேள்விக் குறியாக உள்ள நிலையில் ‘கைலாசா’ என்ற தீவை விலைக்கு வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களான பாப் பிளாக் மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்து பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கும் ரமிந்தர் சிங் ரேஞ்சர் ஆகியோர் இணைந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மேல் சபையில் இந்தாண்டு நடைபெற்ற தீபாவளி விருந்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க நித்யானந்தாவுக்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று நித்யானந்தாவும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விருந்துக்கு முன்பாக நித்யானந்தா அமைப்பு சார்பில் விளம்பரங்களும் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. பாலியல் வழக்கில் சிக்கி இந்தியாவிலிருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளவரை விருந்துக்கு அழைத்ததற்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள். இருந்தபோதிலும் தீபாவளி விருந்து மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றதாக நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளிதழ் செய்திக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். நித்யானந்தா குறித்து ஆதாரமற்ற வகையில் பொய்யான ஆதாரங்களை கொண்டு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நித்யானந்தாவை குறிவைத்து பரப்பப்படும் இதுபோன்ற செய்திகள் மத துவேஷத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுவதாகவும் ரிச்சர்ட் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார்.