மடங்களை நிர்வகிக்க பொறுப்பு அலுவலரை நியமித்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இதை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளத்தில் உள்ள அருணாச்சல ஞானதேசிக மடம், பொது சாதுக்கள் மடம், தஞ்சை பால்சாமி மற்றும் சங்கரசுவாமி மடத்துக்கு பொறுப்பு அலுவலரை அறநிலையத்துறை நியமித்திருந்தது. இந்த நியமனத்திற்கு எதிராக நித்யானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது இதனை விசாரித்த தனி நீதிபதி, அறநிலையத்துறையின் உத்தரவில் தலையிட முடியாது எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்தாண்டு செப்டம்பர் 4ஆம் தேதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா தரப்பில் வழக்கறிஞர் காட்சன் சுவாமிநாதன் ஆஜரானார். அவர் வாதிடுகையில், “ஏற்கனவே அந்த மடங்களின் மடாதிபதியாக இருந்த ஆத்மானந்தா, இந்த மடங்களுக்கு நித்யானந்தாவை மடாதிபதியாக நியமித்திருந்தார்” என்றார்.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ”தற்போது நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. அவர் தென்அமெரிக்க நாடான ஈக்குவிடாரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் இந்த மடங்களுக்கு எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்ற ஆனந்தாக்கள் என்றாலே பிரச்சனையாகத்தான் உள்ளது. நித்யானந்தா தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை. எனவே, இந்த மடங்களின் நிர்வாகத்தை கையில் எடுத்து முறைப்படுத்த அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் எந்த தவறும் இல்லை. நித்யானந்தா மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது” எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Read More : மத்திய பாஸ்போர்ட் அமைப்புகளில் வேலை..!! காலிப்பணியிடங்கள் நிறைய இருக்கு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!