உத்தரபிரதேச சட்டசபையில், குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. சிறார் பாலியல் வழக்குகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்கப்படகூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மசோதா பற்றி பேசிய உத்தரபிரதேச சட்டசபை விவகார அமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, இதன்மூலம், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பு குறையும். பாதிக்கப்பட்ட பெண்ணையும், சாட்சிகளையும் அச்சுறுத்தும் வாய்ப்பு குறையும் என்று கூறினார். மேலும் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
தனியார் மற்றும் பொது சொத்துகளை சேதம் விளைவிப்பவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கும் திருத்த மசோதாவும் நேற்று நிறைவேற்றப்பட்டது. இழப்பீடு கோருவதற்கான கால அவகாசத்தை மூன்று மாதங்களில் இருந்து மூன்று வருடங்களாக உயர்த்த இம்மசோதா வகை செய்கிறது. கலவரத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வழி வகுக்கிறது.