திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்த வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 27). இவர் நேற்று குறிச்சிகுளம் பகுதியில் நெல்லையில் இருந்து மதுரை செல்லும் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளையப்பனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில், தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த வெள்ளையப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெள்ளையப்பனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வெள்ளையப்பன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இதனை பெண்ணின் கணவர் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளக்காதலியை வெள்ளையப்பன் வெளியூர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் இக்கொலையை திட்டமிட்டு செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் (22), நாகராஜன் (20), கரையிருப்பை சேர்ந்த மூக்கன், தமிழ்செல்வன் (19), பாண்டி (22), சிதம்பரம் நகரை சேர்ந்த பேச்சிராஜா (23), செல்வ கணபதி (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.