ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டில் இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழ் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் ”பாரத் குடியரசு தலைவர்” என அச்சிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அரசியல் சாசனத்தின் ஒன்றாவது பிரிவில் உள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாரத குடியரசுக்கு வாழ்த்துகள் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A கூட்டணியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதுமே நாட்டின் பெயர் பாரத் என்பதையே இனி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், இனி இந்தியா என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, பாரத் என்றே நாட்டை அழைக்க வேண்டும் என கூறியிருந்தார். தற்போது ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழிலும் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.