பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார் மேலும் இதனை மீறும் பக்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், செல்போன் பாதுகாப்புக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறித்தும் அறிக்கையில் முக்கிய தகவல் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலதண்டாயுதபாணி் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதற்கிடையே, கோவில் கருவறையில் எடுக்கப்பட்ட முருகன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் கோவில் கருவறைக்குள் செல்போன் மற்றும் கேமரா ஆகியவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கருவறைக்குள் போட்டோ எடுக்கப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு கோவில் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கடந்த 2022ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குள் செல்போன், கேமராக்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் சுய உதவி குழுக்கள் மூலம் செல்போன் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பழனி கோவிலின் மலை அடிவாரத்தில் செல்போன் சேகரிப்பு மையங்கள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விஞ்ச், ரோப் கார் மையங்கள், மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் அருகே செல்போன் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என ரயில், பேருந்து நிலையம், பயணிகள் தங்கும் இடங்களில் விளம்பரம் செய்யப்பட உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களிடமும் செல்போன் உள்ளதா? என சோதனை செய்யப்பட உள்ளது. இதை மீறும் பக்தர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், இத்தகைய நடைமுறைகளை அனைத்து கோவில்களிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர், இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.