சென்னை மாநகரில் 625 வழித்தடங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன. தினசரி 30 லட்சம் பேர் வரை இந்தப் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தனியார், அரசுப் பேருந்துகளை `Gross Cost Contract’ என்ற முறையின் அடிப்படையில் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஆய்வுக்குழுவைவும் அமைத்திருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ஆம் ஆண்டுகளுக்குள் 500 பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை வழங்க ஆலோசகர் குழுவுக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் தங்களின் பேருந்துகளை சென்னைக்குள் இயக்க அனுமதி வழங்கப்படும். அதற்கு கி.மீ. விகிதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தனியார் நிறுவனங்கள் வழங்கும். நிர்ணயம் செய்யப்பட்ட தொகையைவிட அதிகமாக வரும்போது, அதனை மாநகர போக்குவரத்துக் கழகம் எடுத்துக் கொள்ளும். குறைவான தொகை வந்தால் கூடுதல் தொகையை மாநகரப் போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும் எனவும் விளக்கமளித்திருக்கிறது.