சனாதான தர்ம விவகாரத்தில் உதயநிதி மீது புதிய வழக்கு பதியக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது மகாராஷ்டிரா, பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரின் வழக்குகள் வேறு மாநிலங்களில் இருந்து மாற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கூடாது என்று வாதிட்டார்.
ஆனால் அவரின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் சனாதன தர்ம விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக எந்தவொரு வழக்குகளை பதியக்கூடாது என்று உத்தரவிட்டனர்.