வயதான தன்னுடைய தாயார் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்குகளுக்கும், புதைப்பதற்கும் பணமில்லை என்றுக்கூறி, வீட்டிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் வெண்ணலையைச் சேர்ந்தவர் அல்லி (72). இவருக்கு பிரதீப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி தனது குடும்பத்துடன் காக்கநாட்டில் வசித்து வருகிறார். பிரதீப் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வேறு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
அல்லி தனது மகன் பிரதீப்புடன் வசித்து வந்த நிலையில், பிரதீப் அப்பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். குடிபோதையில் அக்கம்பக்கத்தினருடன் பிரதீப் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். அவர்கள் யாரும் பிரதீப்பின் குடும்பத்தினரிடம் பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அல்லியின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே, பிரதீப் தனது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அல்லி உயிரிழந்தார். பின்னர் குடிபோதையில் இருந்த பிரதீப் தனது தாயாரின் உடலை அடக்கம் செய்வதற்காக, தனது வீட்டின் முற்றத்தில் குழி தோண்டியுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அல்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு பிரதீப்பிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு கூட அக்கம்பக்கத்தினர் உதவவில்லை. உடலை அடக்கம் செய்ய என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் எனது தாயின் உடலை வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்தேன் என பிரதீப் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.