நாடு முழுவதும் மத்திய அரசு நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரிசியில் மாவு சத்தும், புரதச்சத்தும் உள்ளது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
இவை அரிசியாக மாற்றப்பட்டு 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமை வழங்கப்படும். அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, கடந்த ஆண்டு முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் 2,000 டன் என ஆண்டுக்கு 24,000 டன் ஊட்டச்சத்து கலவையை தயாரிக்கும் பணியில் நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.
மேலும், இந்த அரிசியை தலசீமியா எனப்படும், மரபணு சார்ந்த ரத்த சோகை போன்ற உடல் நல குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்ற விழிப்புணர்வு வாசகத்தை, அரிசி சாக்கு பையில் அச்சிடுமாறு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் உத்தரவிட்டுள்ளது.