விஷச்சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது என்று மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, மது பிரியர்கள் குடித்த அந்த சாராயத்தில் அதிகப்படியான அளவு மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சட்டவிரோதமாக மெத்தனால் விற்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், விஷச்சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது என்று மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகியவற்றிற்காக மெத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில், மருத்துவமனைக்காக மெத்தனால் பெறப்பட்டு, அது சட்டத்திற்கு புறம்பாக மருத்துவ காரணமின்றி விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட வாரியாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள் விற்பனை செய்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சட்டவிரோதமாக நடைபெறும் மெத்தனால் உற்பத்தி, விற்பனையை கண்காணிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.