வீட்டில் யாரும் மரியாதை தராததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி வேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மனைவி சுசீலா (53). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளார். மகளுக்கு கடந்த 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. அவருக்கு சொந்தமான நிலத்தில், கடன் பெற்று வீட்டை கட்டியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ஆறுமுகம் காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுசீலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், தகவலின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகம், வீட்டில் தனக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. என்னை ஒதுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது என்னை மனைவி கீழே தள்ளிவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த நான் கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து விட்டேன்” என தெரிவித்துள்ளார். பின்னர், அவரை போலீசார் கைது செய்தனர்.