31 ஆண்டுகளாக ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் சமூக ஆர்வலர் நர்ஜெஸ் மொஹம்மத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் இயற்பியல், வேதியியல், இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைதிக்கான் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த பெண் சமூக ஆர்வலரான நர்ஜெஸ் மொஹம்மத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரை ஈரான் ஆட்சியாளர்கள் 13 முறை கைது செய்தனர். 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். 154 கசையடி கொடுத்தனர். இன்னும் அவர் சிறையில் தான் இருக்கிறார்.
அமைதிக்கான நோபல் பரிசு வழங்க அவரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது. அதாவது, இஸ்லாமியக் குடியரசில் உள்ள முக்கியமான பிரச்னைகளுக்காக மொஹம்மத் பிரச்சாரம் செய்து கொண்டே மதகுரு முறையை எதிர்த்தார் மற்றும் கட்டாய ஹிஜாபிற்கு எதிராக குரல் எழுப்பி வந்தார். சிறையில் இருந்தபோதும் தமது பிரச்சாரத்தை அவர் கைவிடவில்லை.
நர்ஜெஸ் மொஹம்மத் ஈரானின் வடமேற்கில் உள்ள ஜன்ஜான் என்ற இடத்தில் 1972ல் பிறந்தார். கல்லூரியில் இயற்பியல் படித்து பொறியியலாளர் ஆனார். விரைவில் பத்திரிகை துறைக்கு மாறிய நிலையில் சீர்திருத்த இயக்கத்துடன் தொடர்புடைய செய்தித்தாள்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டார்.
2003ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஈரான் வழக்கறிஞர் ஷிரின் எபாடியால் நிறுவப்பட்ட மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான மையத்தில் சேர்ந்து மரண தண்டனையை ஒழிப்பதற்காகப் போராடி வந்தார். கடந்த ஆண்டு ஈரானில் மஹ்சா அமினி அறநெறி போலீசாரால் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் “பெண் – வாழ்க்கை – சுதந்திரம்” என்பதை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தின் மூலமும் மொஹம்மத் பெயர் வெளியே தெரிய வந்தது. ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறது. தன்னுடைய நாட்டு மக்கள் எச்சரிப்பதை ஈரான் அரசாங்கம் காது கொடுத்து கேட்க வேண்டும் எனவும் நோபல் கமிட்டி வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.