அணுக்களில் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வுக்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்தில் அந்தந்த துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கொரோனா வைரசுக்கு எதிராக எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்கும் கண்டுபிடிப்புக்காக ஹங்கேரிய அமெரிக்கர் கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெய்ஸ்மேன் இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்பாக ஆய்வு செய்ததற்காக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பியர் அகோஸ்டினி, பேரன்க் கிராஸ், அன்னே எல்’ஹுல்லியர் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரான்கள் நகரும் செயல்முறைகளை அளவிடப் பயன்படும் ஒளியின் வெளிச்சத்தை உருவாக்குவதற்கான வழியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மிக குறுகிய காலக்கட்டத்தில், அதாவது அட்டோசெகண்டுகளில் பத்தில் ஒரு பங்கு அவகாசத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்க இவர்களின் ஆய்வு உதவுகிறது.
இவர்கள் கண்டுபிடித்துள்ள ஒளியின் வெளிச்சம் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் நிகழும் படங்களை வழங்க பயன்படுத்தப்படலாம். பல ஆண்டுகளாக, இவர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து வந்துள்ளனர். மிக மிக வேகமாக நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பது மிகக் கடினம். தற்போது, இவர்களின் ஆய்வு, வேகமாக நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்க உதவுகிறது.