திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் இந்த பலகை அகற்றப்பட்டது. இதனை எதிர்த்து பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், “பழனி தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது..
தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோயிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உள்ள சூழலில் பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மனுதாரருக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி இன்று உத்தரவை பிறப்பித்திருந்தார். வழக்கு விசாரணையில், இந்து அறநிலையத்துறை ஆலைய நுழைவு விதியின்படி, இந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பலகையை கோயிலில் வைக்க வேண்டும் என்று செந்தில் குமார் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இன்று வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதில், “இந்து அல்லாதவர்கள் கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது. இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும். மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அதில், இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாதம் “உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம். இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.