வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார். பருவமழையால் பாதிப்புகளை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முதல்வர் முக. ஸ்டாலின் பேசுகையில் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகளால் மழையால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. பருவமழை காலத்தில் நோய் தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலைகளின் நிலைமை மோசமாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. சாலைகள் சரியில்லாததால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மழை நீர் வடிகால் பணிகளை நான் விரைவில் ஆய்வு செய்யவுள்ளேன் என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.