தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் துறைவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை செயலாளர்களும் பங்கேற்றனர். இதில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது? செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர் வாருதல் பணிகள் குறித்தும் இதில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில், தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தவும், துவக்கப்படாத பணிகளை விரைவில் துவங்கவும் அனைத்துத்துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.